top of page
Writer's picturePraveena Vijay

என் உயிரே !!! என் உறவே !!!-9

அத்தியாயம் 9:

ஒகே கீர்த்தி, நீங்க கிளம்புங்க , நான் அந்த ஃபைலை மட்டும் அனுப்பி விட்டு கிளம்பி விடுவேன். ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணினால் நானே உங்களை ட்ராப் செய்து விடுகிறேன். 11 ஆகி விட்டது. அதனால்தான்என்றவனிடம்

இல்லை சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபடி அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் தனது லன்ச் பாக்ஸை எடுக்க அலுவலகத்தின் ஓய்வு அறைக்குள் உள்ளே நுழைவதற்கும் பாலாவின் தந்தை அந்த அறைக்குள் வருவதற்கும் சரியாக இருந்தது.

கீர்த்தி ஓய்வு அறைக்கு சென்றதும் , அன்று முடித்திருந்த மாடிஃபிகேசனை சரி பார்த்தபடி , முடிந்தவுடன் நேரே வீட்டிற்கு போக வேண்டும். அம்மாவும், அப்பாவும் அவன் வேற எங்கேயோ போய் தங்கப் போகிறான் என்று நினைத்துதான் பயந்து போய் கால் பண்ணியிருக்கிறார்கள் என்று நினைத்த போது அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

காலையில் வீம்பாக,பேசி விட்டு வீட்டிற்கு போகலாமா என்று கூட தோன்றியது. இன்று ஒருநாள் மட்டும் எங்கயாவது தங்கி விட்டு நாளை போகலாமா. ஒரு பயமாவது அவர்களுக்கு காட்ட வேண்டும் என்று கூட நினைத்தான். ஆனால் நேரம் செல்லச் செல்ல அது தவறு என்று தோன்றியதாலும்,காலையில் இருந்த கோபம் இப்போது இல்லை என்பதாலும், மேலும் தன் பெற்றோர்களின் மேல் இருந்த அளவுக்கு மீறிய அன்பினாலும், அவனது முடிவை எப்பவோ மாற்றி இருந்தான். கொஞ்சம் யோசித்தால் அவன் மேல் உள்ள அதீத பிரியத்தினால் தான் இந்த வருத்தமே என்பதே உண்மை. இவ்வாறெல்லாம் யோசித்திருந்தவனுக்கு தாய் தந்தை போன் செய்த பிறகு அங்கு இருக்கவே முடியவில்லை. வீட்டிற்கு போனது காலையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு, தன் நிலைமையினை தந்தையிடம் மெதுவாக அவருக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தபடி வேலையில் ஈடுபட்டிருந்தான்.

பாலா கீர்த்தியின் சீட்டில் அமர்ந்திருந்த படியால் , ஜெகனாதன் உள்ளே நுழைவதை உணர முடியாது. பாலாவின் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெகனாதன் ஒரு வளைவில் திரும்பும் போதுதான் தன் மகன் அங்கே இருந்த ஒருகேபினில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அருந்ததியை கார் பார்க்கினிலே நிற்க சொல்லிவிட்டு தான் மட்டுமே மேலே வந்திருந்தார். அவரே அவரது மகனை கூப்பிட்டு வர வேண்டுமாம்.இதற்கு ஓன்றும் குறைச்சல் இல்லை அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்றபடி அருந்ததியும் கீழேயே நின்று கொண்டிருந்தாள்.

தன் முன்னால் அசைவினை உணர்ந்த பாலா, கீர்த்திதானோ என்றபடி, சரி கீர்…… என்று நிமிர்ந்தவன் தன் தந்தையினை பார்த்தவன் அதிர்ச்சி ஆனான்.

விதி அவர் வந்திருந்த விதத்தினை நேர் மாறாக சிந்திக்க விடாமல்…… தான் அவ்வளவு தூரம் வருவதாகச் சொல்லியும் தனது தந்தை வந்திருக்கிறார் என்றார் என்ன அர்த்தம்…..என்று யோசித்தவன், கீர்த்தியும் இங்குதான் இருக்கிறாள் என்பதால் மெதுவான குரலில்

இப்போ எதற்கு இங்கு வந்தீர்கள்.என்றவனிடம்

அவன் இன்னும் கோபத்தில் இருக்கிறான் என்பது தெரிந்ததால் தணிந்த குரலில் அதே நேரத்தில் அழுத்தமாக

வா வீட்டுக்கு போகலாம் என்றார்.

ஏன் குற்றமுள்ள மனசு குத்துகிறதா அப்பா. காலையில் என் வீடு… வெளியே போடா… என்றீர்கள், இப்போது வா…. என்கிறீர்கள். நீங்க கூப்பிட்டால் நான் வர வேண்டும், போ என்றால் போக வேண்டும் என்றால். அப்போ எனக்கு என்ன தான் உரிமை அந்த வீட்டில்” என்றவன், அமைதியாய் அவரை வெறித்துப் பார்த்தான்.

பிறகு மீண்டும்

இன்று வருவது சந்தேகம் தான். எனக்கு வேலை இருகிறது.அதனால் என்று… “

இழுத்து தன் சுய கவுரவத்தை காட்டிய‌ பாலாவுக்கு அப்போது நாக்கில் சனிதான் இருந்திருக்க வேண்டும்

ஸோ உனக்கு என் மேல் இன்னும் கோபம் அப்படித்தானே என்றவருக்கு மகனின் மவுனம் , அது உண்மை என்றே தோண்றியதால் சற்று முன் இருந்த மனநிலை மாறி கோபத்தில் கண்கள் சிவந்தது. வீட்டில் அவனை அவமானப் படுத்தியதாக நினைத்துக் கொண்டு அவனது அலுவலகத்தில் அவரை பழிவாங்குகிறானோ என்ற நினைத்தவரின் குரல் இப்போது அவரையுமறியாமல் உயர்ந்தது.

அதே நேரத்தில் கீர்த்தியும் ஓய்வு அறையின் வாசலை தொட்டிருந்தாள். பாலா யாருடனோ பேசிக் கொண்டிருந்த குரல் கேட்ட படியால் யாராய் இருக்கும் என்றபடி அவள் வந்த போது ஒரு நடுத்தர வயதுடையவரின் பக்கவாட்டு உருவம் தெரிந்தது. அவள் பாலாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று அடி எடுத்து வைத்தவள், அந்த பெரியவரின் குரலில் அப்படியே நின்றாள்.

என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. எனக்கு மனசு குறுகுறுக்கிறதா , நீ மத்த பசங்க மாதிரி குடும்பம், குழந்தை என்று இருக்க வேண்டும் என்று நான் நாயாய் அழைகிறேன், பார் எனக்கு வேண்டும் . அப்பா எதற்காக காலையில் அப்படி சொன்னேன் என்று யோசிக்கத் தெரியாத உன்னைத் தேடி …….. சாப்பிடக் கூட முடியாமல் , என் உடல் நிலைமையினைக் கூட பொருட்படுத்தாமல் வந்தேன் பார். என்னைச் சொல்ல வேண்டும். அப்படி என்னடா சொன்னேன் திருமணம் செய் என்றுதானே .அப்படி சொன்னதற்காக என் மனது குறுகுறுக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டும்”. என்று சற்று நிறுத்தினார்

:ச்சேய் அவசரப் பட்டு பேசிவிட்டோமே , பேசாமல் வீட்டிற்கே போய் இருந்திருக்கலாம்

என்று நொந்தவன் ஜெகனாதனை பேசாமல் எவ்வளவோ தடுத்து நிறுத்திப் பார்த்தாலும் முடியவில்லை.அவர் சற்று நிறுத்தியதும்

அப்பா இது ஆபிஸ், ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்என்று கூறியதுதான் தாமதம் ஜெகனாதன் இன்னும் கிளம்பி விட்டார்.

கீர்த்திக்கு வந்திருப்பவர் பாலாவின் தந்தை என்பது புரிந்தது.அவனது திருமண விசயத்தில் பிரச்சனை என்பதும்,அதனால் இன்று ஏதோ பெரிய வாக்கு வாதம் என்ற அளவுக்கு புரிந்தது. இப்போது அவளுக்கு என்ன செய்வது என்றே தெரிய வில்லை. சொல்லி விட்டு போகலாம் என்றால் அவர்கள் இடையில் போய் நிற்க வேண்டும். சொல்லாமல் போய் விடலாம் என்றால் அதுவும் நன்றல்ல.என்ன செய்வது என்று யோசித்தவளை அவளுக்கு சம்பந்தமில்லாத விசயம் ஒன்று மண்டைக்குள் குடையத் தொடங்கியது அது வேறொன்றுமில்லை பாலா ஏன் திருமணம் செய்ய மறுக்கிறான். என்ன காரணம் என்று யோசிக்கும் போதே

மதுஎன்ற ஜெகனாதனின் வார்த்தையில் மீண்டும் அவர்களை நோக்கினாள் கீர்த்தி

இது சாரோட ஆபிஸோ அதை மறந்து விட்டேன் நான். உங்களுக்கெல்லாம் வளருகிற வரைக்கும் தான் அப்பா அம்மாவெல்லாம். அதன் பிறகு நாங்கள் எல்லாம் கருவேப்பிலை மாதிரி. இப்போ என்னடா மதுவைத் தவிர வேற யாரையும் மணக்க மாட்டாய் அவ்வளவுதானே. இனி உன் விசயத்தில் ஒருபோதும் நான் தலையிட மாட்டேன்.உன்னிடம் கெஞ்சி கெஞ்சி வெறுத்து போய் விட்டேன். என்னுடைய உண்மையான பாசத்தையே சந்தேகப்பட்டு, ஏதோ குற்றம் செய்தவன் , குறுகுறுத்து வந்திருக்கிறாய் என்றெல்லாம் பேசுவதை என்னால் தாங்க முடியவில்லை பாலா. . இனி நீயாய் என்று வந்து திருமணம் என்ற பேச்சை எடுக்கிறாயோ அதுவரை நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். என்றவர் அதற்கு மேல் நில்லாமல் சிறிது தூரம் சென்றவர்

” i am really very very sorry” என்றவரைப் பார்த்து என்ன செய்வது என்றறியாமல் அப்படியே சிலையாய் நின்றிருந்தான் பாலா.

எதற்கு இந்த மன்னிப்பு என்று யோசிக்கிறாயா , நீ தொந்தரவு என்று நான் செய்ததை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாயே அந்த செயல்களுக்கெல்லாம். என்றவர் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட நிற்காமல் விருட்டென்று வெளியேறிச் சென்று விட்டார்.

இப்போது கீர்த்திக்கோ தர்ம சங்கடமான நிலைமை

அவனைப் பற்றிய உண்மை தனக்கு தெரிந்ததைப் பற்றி நினைக்கும் போது அவன் மனம் என்ன பாடு படும் , தான் முதலிலேயே கிளம்பி இருக்க வேண்டும்” என்று நினைத்தபடி மெதுவாய் பாலாவின் முன் நின்றாள்.

சார் நான் கிளம்புகிறேன்என்றவளிடம் நிமிர்ந்து கூட பார்க்காமல்

சரி கீர்த்தி

என்றவுடன் அவளும் வேறு எதுவும் பேசாமல் ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பாள்.

அப்போது பாலா ஏதோ யோசித்தவனாய்

கீர்த்தி ஒரு நிமிடம், இங்க வாங்கஎன்று அழைத்தான்

ஒன்றும் புரியாமல் கீர்த்தியும் அவனை நோக்கி வந்தாள்

கீர்த்தி இப்போ வந்தது எங்க அப்பா” என்றவன்….மேலும் எதோ சொல்ல வந்தவன் நின்றிருந்த படியால் அருந்ததியின் வருகையினை பார்க்க முடிந்தது.

அப்போதுதான் அவனது அம்மாவும் அங்கு வந்திருப்பது தெரிந்தது.

அம்மா நீங்க எப்போ வந்தீங்க அப்பா சொல்லவே இல்லைஎன்றவனை அனல் பார்வை பார்த்தவள்

அதையெல்லாம் சொல்கிற நிலைமையில்தான் உன் அப்பா இருக்கிறார்என்றபடி அருகில் இருந்த கீர்த்தியின் மேல் பார்வையினை ஓட்டினாள் அருந்த்தி.

யாரோ ஒரு மூன்றாம் பெண்ணின் முன்னால், அதுவும் தன் மகனிடம் வேலை பார்க்கும் பெண் முன்னால் எதுவும் பேசக்கூடாது என்று முடிவு செய்தவள்.

வா பாலா, அப்பா மட்டும் தனியாய் கிளம்பிப் போகிறார்”. என்று ஓற்றை வரியில் நிறுத்தினாள்.

தனது தாய் கீர்த்தி முன்னிலையில் அடக்கி வாசிக்கிறாள் என்று புரிந்த பாலா,இதற்கு மேலும் பிடிவாதம் கூடாது என்பதால் . 5 மினிட்ஸ் மா என்று .சிஸ்டமை ஆஃப் செய்யத் தொடங்கினான்

கீர்த்தியும் சொல்லிவிட்டு கிளம்பினாள்

அவள் சென்றதும் அருந்ததி

பாலா 11 மணி ஆகிவிட்டது, அந்த பொண்ணு இப்போது கிளம்புகிறாள். லேட் நைட்டில் எப்படி போவாள் அவள், என்ன வேலை என்றாலும் லேடி ஸ்டாப்ஸை எல்லாம் இரவு 7 மணிக்குள் அனுப்பி வைத்து விடு, ஏற்கனவே என்ன பாவம் பண்ணினமோ நாம இப்படி அமைதி இழந்து நிற்கிறோம்.இதில் இந்த பாவம் வேறயா என்றவளிடம்

வாங்க போகலாம் என்றபடி செக்யூரிட்டியிடம் சொல்லி விட்டுக் வெளியேறினான் பாலா

இல்லம்மா இன்னைக்கு மட்டும் இப்படி ஆகி விட்டது. அந்த பொண்ணு பேரு கீர்த்தனா. ரொம்ப நல்ல பெண்.ரொம்ப ஸ்மார்ட். அவ டீம் லீடரோட மனைவிக்கு டெலிவரி டைம் என்பதால் அவருக்கு பதிலாய் இருந்து முடித்துக் கொடுத்துவிட்டு போகிறாள் என்று அருந்ததியிடம் சொல்லியபடி இருவருமாய் கீழே இறங்கி வந்தனர்.

அங்கே கீர்த்தியின் பைக் அவளிடம் மக்கர் பண்ணிக் கொண்டிருந்தது. ” ”ச்செய்” என்றபடி பைக்கை உதைத்தவள், மீண்டும் தன் கால்களையே பிடித்தபடி முகத்தைச் சுழித்தவளைப் பார்த்த தாய் , மகன் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

கொஞ்சம் வேகமாய் முன்னே சென்ற பாலா கீர்த்தியின் பைக்கை ஸ்டார்ட் செய்து பார்த்தான். அவளது பைக் மெக்கானிக்கை பார்க்காமல் வர மாட்டேன் என்பது போல் அடம் செய்தது. அவன் அவளது ஸ்கூட்டியை ஆராய்ந்து கொண்டிருந்த போதே அருந்ததி கீர்த்தியின் அருகில் வந்தாள்,

நீ எந்த ஏரியாம்மாஎன்று விசாரித்தாள்.

மைலாப்பூர் மேடம்.என்ற போது அவளையுறியாமல் கவலைக் கோடுகள் அவளது முகத்தில் தெரிந்தது.

பாலா இந்த பொன்ண…… என்றவள் ….. கீர்த்தியிடம் திரும்பி பேர் என்னம்மா என்று கீர்த்தியைப் பார்த்தாள்

கீர்த்தி வாய் திறக்குமுன் பாலாவே தனது தாய்க்கு மீண்டும் நினைவுறுத்த

கீர்த்தி ம்மாஎன்றவன் அருந்த்தத‌ி கூற வந்தததை என்ன என்று கேட்டான்.

நாம் போற வழியில் கீர்த்தியை அவளது வீட்டில் இறக்கி விட்டுச் செல்வோம். மைலாப்பூர் தானே”என்றபோதே

இல்லை பரவாயில்லை மேடம், நா நான் ஆட்டோ பிடித்து போய்க் கொள்கிறேன்.என்று மறுத்தாள் கீர்த்தி.

இல்லம்மா… இப்பவே லேட் ஆகிவிட்டது.இனிமேல் தனியா ஆட்டோ லாம் பிடித்தால் கஷ்டம். இவனைச் சொல்ல வேண்டும்” என்றபடி பாலாவை முறைத்தவள்.

ஏன் கீர்த்தி உங்க சார் கூப்பிட்டால்தான் வருவாயாஎன்றவுடன்

அப்ப‌டியெல்லாம் இல்லை மேடம், எங்க வீடு மைலாப்பூரில் கொஞ்சம் உள்ளே இருக்கிறது என்றவுடன் பாலா

பரவாயில்லை வாங்க‌என்றபடி காரினை எடுக்க சென்றான் அந்த சூழ்நிலையில் மறுப்பு சொல்வது அநாகரிகமாய் பட கீர்த்தியும் சம்மதமாய் தலையாட்டினாள்

அதைப் பார்த்த அருந்ததி நான் சொல்லும் போது மறுத்தாய், பாலா சொன்ன உடனே தலை ஆட்டி விட்டாய் கீர்த்தி . நான் சொன்னது போல் அவன் சொன்னால்தான் கேட்பாயா என்று கிண்டல் செய்த வுடன் அவளையுமறியாமல் அவளின் குறும்புத்தனம்

பின்ன இல்லையா மேடம்…. முதலாளி சொல்வதைதானே கேட்க முடியும். இல்லையென்றால் நாளைக்கு சீட்டைக் கிழித்து வெளியே போ என்று சொன்னால் யார் வந்து என்ன சொல்ல முடியும் .அதனால்தான் என்றபடி சிரித்தாள்.

அவள் பேசி சிரித்த அழகைப் பார்த்த அருந்ததிக்கு என்னவோ இதே போல் தனக்கும் ஒரு மகள் இல்லையே என்று தோன்றியது. அருந்ததிக்கு மகள் இல்லையே என்ற கவலை எப்போதும் இருக்கும். எந்த பெண் குழந்தையைப் பார்த்தாலும் அவள் ஆசை ஆசையாய் கொஞ்சுவாள்.

ஏனோ குமரிப்பருவத்தில் இருந்த கீர்த்தியைப் பார்த்த அருந்ததிக்கு அவளின் அடி மனதின் ஆசை அப்படி நினைக்க செய்து விட்டது.

மூவரும் காரில் ஏறி அமர்ந்து சற்று தூரம் வரை நிசப்தமாகவே வந்தனர்.அந்த அமைதியை முதலில் கலைத்தது பாலாதான்.

அம்மா அப்பா என் மேல ரொம்ப கோபத்தில் போய் இருக்கிறார். என்ன சொல்லி அவரை சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை”. என்றவன் தாய் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் அம்மாஎன்று அழுத்தினான்

நீ சொல்வது கேட்கிறது.வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்” என்று கீர்த்தி இருந்த படியால் நாசுக்காய் பேச்சினை மாற்றினாள் அருந்ததி.

கீர்த்திக்காக என்று யோசிக்கிறீர்களா

அதெல்லாம் ஒரு 1/2 மணி நேரத்திற்கு முன்னால் நம்ம குடும்பம் கவலைப் பட்டிருக்க வேண்டிய விசயம். நானும் அப்பாவும் பண்ணின வேலையில் அனேகமாய் கீர்த்தி ஓரளவுக்கு விசயத்தை ஊகித்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் பயங்கர ஷ‌ார்ப் வேற கீர்த்தி. இப்போ கீர்த்திக் கிட்டே கேளுங்க , நம்ம குடும்பத்தில் என்ன நிலைமை என்று கரெக்டா சொல்வாங்க என்றபடி

அப்படித்தானே கீர்த்தி

என்றவனை

இவன் கேலியாக பேசுகிறானா இல்லை சீரியசாக பேசுகிறானா என்று தெரியாமல் முழித்தாள் கீர்த்தி

அவள் முழிப்பதைப் பார்த்த அருந்ததி,

அப்படியா …. சொல்லு பார்க்கலாம். அவன் இருக்கிறான் என்றெல்லாம் கவலைப் படாதேஎன்றதும்

அவள் சிந்தைக்கு எட்டியிருந்த விசயங்களின் படி அவள் சற்று திணறியபடி பேச ஆரம்பித்தாள்

உங்களையும் , சாரையும் பார்த்தால் காதலை எதிர்ப்பவர்கள் மாதிரி தெரியவில்லை. பாலா சார் ஆசைப்பட்ட பொண்னையே அவருக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் .பாலா சாரும் தப்பான ஜாய்ஸை தேர்ந்தெடுக்க மாட்டர் என்பதும் தெரியும். ஸோ நான் பாலா சார் பக்கம்” என்றவளிடம் திரும்பி

தேங்க்ஸ் கீர்த்தி, எனக்கு சப்போர்ட் பண்ணி ஒரு ஜீவன் பேசுதே.அந்த வகையில் எனக்கு சந்தோசம்.

என்றபோதே

கீர்த்தி சார் சார் இந்த ஸ்ட்ரீட் தான். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன் சார்.” என்றவளிடம் அருந்ததி

ஏன் கீர்த்தி எங்களை வீட்டிற்கெல்லாம் கூப்பிட மாட்டாயா

என்றவுடன்

விழிகள் நிறைந்த சந்தோசத்துடன் சார், நேரா போய் செகெண்ட் லெஃப்ட் போனால் வருகிறfirst apartment sir”

என்று வழி சொன்னாள்.

அவள் சொன்னபடி ஓட்டியவன் அவர்களது அபார்ட்மெண்டின் முன்னால் நிறுத்தினான்

ஏற்கனவே தன் வீட்டிற்கு கால் செய்து கதவைத் திறந்திருக்கும் படி சொல்லி இருந்ததால் மைதிலியும்,ராகவனும் அவளை எதிர்பார்த்தபடி வாசலின் அருகிலேயே நின்றிருந்தார்கள். ஏற்கனவே மைதிலிக்கு கீர்த்தி தனியாய் எப்படி வருவாளோ என்று ராகவை போய் கூட்டி வர சொல்லி இருந்தாள். ஆனால் அவள் கிளம்பி விட்டேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி பால்கனியில் இருந்து அபார்ட்மென்ட் கேட்டையே பார்த்தவளுக்கு மகள் காரில் ஒரு பெண்மணியுடன் வந்து இறங்கியதைப் பார்த்தவள் யாராய் இருக்கும் என்று, கணவனிடம் சொல்லியபடி படி கதவை திறந்து வைத்து மகளை எதிர்நோக்கியபடி நின்றிருந்தாள் மைதிலி

வாங்க மேடம், வாங்க சார் என்ற படி மகள் கூட்டி வந்தவர்களை தெரியாவிட்டாலும் முகத்தில் புன்முறுவலுடன் வரவேற்ற மைதிலியும் ராகவும் ஹாலினுள் அமரச் செய்தனர்.

அதன் பிறகு அவர்களை அறிமுகம் செய்தாள் கீர்த்தி. ராகவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே , அவர்களுக்கு காபி தயார் செய்ய எழுந்து போனாள் மைதிலி. அவள் பின்னாலே கீர்த்தியும் உள்ளே செல்ல‌

தாங்கள் கிளம்பப் போவதாகவும், எதுவும் செய்ய வேண்டாம் என்று மைதிலியிடம் கூற அருந்ததியும் உள்ளே சென்றாள்.

அங்கு மைதிலியின் பின்னால் கழுத்தைக் கட்டிக் கொண்டு தாயிடம் கிண்டல் செய்து கொண்டிருந்த கீர்த்தியை பார்த்தவள் சிரித்தபடி

என்ன கீர்த்தி அம்மா செல்லமோஎன்றவளைப் பார்த்து

உதட்டைக் சுழித்தவள் நீங்க வேற மேடம் . அந்த கொடுமையை ஏன் கேட்கிறீர்கள் நான் யார் செல்லமும் கிடயாது. இந்த வீட்டில் தனி ஆள் நான். இப்ப கூட பாருங்க உங்க பையனை காணோம் என்று நீங்களும் சாரும் வந்தீர்கள். நான் ஒரு பொண்ணு என்னை தேடி யாராவது வந்தார்களா . என்று அப்பாவியாய் சொன்னவளைப் பார்த்த மைதிலி

அடிப் பாவி வரவா வரவா என்று அவர் போனில் கேட்ட போது பெரிய பாரதியார் கண்ட புதுமைப் பெண் மாதிரி பேசி விட்டு இப்படி பேசுறீயே உன்னைஎன்று கன்னத்தில் திருகிய மைதிலியிடம்

வரவா வரவா என்று கேட்டால் அப்படித்தான் சொல்ல முடியும் .வேற என்ன சொல்வாங்கஎன்றவளை முறைத்தபடி

உனக்கு அப்புறம் இருக்கு கச்சேரி, நீங்க வாங்க இவ ஒரு அறுந்த வாலு. இதையெல்லாம் சமாளிக்கவே முடியாது. ஆனால் என்ன…. வெளியே சமத்துனு பேர் வாங்கிடுவா.

சரி சரி என்னைப் பற்றி பாராட்டு மழையெல்லாம் போதும்.அம்மா…. மேடமும் நல்ல ஜோவியல் டைப் மா. நான் கூட முதலில் பயந்தேன் பாலா சார் மாதிரியேதான் அவங்க அம்மாவும் இருப்பார்கள் என்று.

ஆனால் ஆப்போசிட்டா இருக்காங்க என்று அருந்ததியை பற்றி மைதிலியிடம் சொன்னாள்.தன் மகள் அவ்வளவு சுலபமாய் யாரிடம் கலகலக்க மாட்டாள். அவளே இப்படி என்கிற போது அருந்ததியிடம் சற்று சுலபமாக மைதிலியாலும் பேச முடிந்தது.

காபி வேண்டாம் என்று சொல்லப் போன தாய் அங்கேயே செட்டில் ஆனதில் சற்று டென்சன் ஆன பாலா அடிக்கடி கிச்சனைப் பார்த்த படி ராகவுடன் பேசிக் கொண்டிருந்தான்

பாலாவின் தேடலை உணர்ந்த ராகவ்

மைதி சீக்கிரம் வா. அவங்க இனிமேல் பெசன்ட் நகருக்கு போக வேண்டும். என்ன பண்ற உள்ளே” என்று மைதிலியை அழைத்தார்.

அதன் பிறகு அவர்கள் சற்று நேரத்தில் விடைபெற்றபடி கீழே சென்ற போது பாலா கீர்த்தியை தனியே அழைத்து

கிளம்புகிறேன் கீர்த்தி. தென்…… தேங்க்ஸ்…… நீங்கள் கொடுத்த காபிக்கும்…….. மற்றும்…….. என்று நிறுத்தியவன் அவளை கூர்மையாகப் பார்த்தபடி…… நாளைக்கு அனேகமாக என்னைப் பற்றின ஹிஸ்டரி லாம் அலுவலகத்தில் பரப்ப போவதற்கும், நன்றி

என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல சிரித்த படி சொல்லி விட்டு கீழே இறங்கினான் பாலா.

காரில் ஏறியதும் அருந்ததியின் மேல் பாய்ந்தான்.

இந்நேரம் வீட்டுக்கு போய் இருக்கலாம்.உங்களால் இப்போ பாருங்க மணி என்ன வென்று”என்றவனிடம்

என்னமோ தெரிய வில்லை பாலா எனக்கு கீர்த்தி மேல ஒரு பிரியம் வந்துடுச்சு. 1 மணி நேரம் கூட ஆக வில்லை. இப்படி ஒரு மகள் எனக்கு கிடைக்க வில்லையே என்று .எனக்கு ஏக்கமாய் இருக்கிறது அவங்க ரெண்டு பேரும் எப்படி பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா. உனக்கெல்லாம் அது புரியுமா.” என்றவளிடம் முறைப்பை வீசியவன் பின் சாலையினைப் பார்த்து தனது வீட்டை நோக்கி விரைந்தான்.

………….பாலா சொல்லி விட்டுச் சென்ற பிறகு சில கணம் சிலையாய் நின்றவள், தன்னை ஆசுவாசுப் படுத்திக் கொண்டு கட்டிலில் விழுந்தபடி

என்னை……… என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவர் ஹிஸ்டரி பெரிய சலீம், அனார்கலி ஹிஸ்டரி …. இதை வேறு நான் பரப்ப போகிறேனா? அதிகமாய் போனால் ….. கவியிடம் சொல்லியிருப்பேன். இனி அவளிடமும் கூற மாட்டேன்….இவனை பற்றி யாரிடமும் வாயினைத் திறக்கக் கூடாது. அதன் பிறகாவது இந்த கீர்த்தியைப் பற்றி புரிந்து கொள்ளட்டும்.

என்று தனக்குத்தானே தீர்மானித்தவள் கண்களை மூடினாள்

1,043 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று...

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.....

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில்...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page